Wednesday, January 25, 2012

தமிழ்ப் பெயர்கள்


”முகநூலில் தலைப்புச் செய்தியாக இந்தத் தகவலை எழுதத் தொடங்கும் போது தான் தோன்றியது, இதை ஏன் ஒரு பதிவாக எழுதக்கூடாது என்று..?!!”

அதன் விளைவு:

இன்று (25-01-2012) காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் எழுத்தாளர் கழுகூர்.பழனியப்பன் உடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி.. அதில் தமிழ்ப் பெயர்கள் சூட்டுவதைப் பற்றிய ஒரு பேச்சு.. தமிழர்கள் நவீனமாக பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று அர்த்தம் புரியாமல் தான் பெயர் வைக்கிறார்கள்.. உதாரணத்திற்கு அவர் சொன்ன இரண்டு பெயர்கள்.

சியாமளா - என்றால் கருப்பு என்று பொருள், கருப்பாயி என்பதன் மாற்றுப் பெயர் தான் சியாமளாவாம்..!!!

ஸ்வேதா - சுவேதம் என்றால் வெள்ளையாம்.. வெள்ளையம்மா என்பதன் மாற்றுப் பெயர் தான் ஸ்வேதாவாம்.


ஏகப்பட்ட நல்ல தமிழ்ப் பெயர்கள் உண்டு. எனக்குத் தெரிந்து தமிழ் மொழியில் மட்டும் தான் அந்த மொழியின் பெயரையே மக்களுக்கு சூட்டும் வழக்கமும், வாய்ப்பும் உண்டு.

தமிழ் என்று ஆண்,பெண் இரு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டலாம்..
தமிழரசி, தமிழரசன், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழன்பன், தமிழ்க்கதிர், தமிழ்நாடன், தமிழ்நேயன்,தமிழ்வண்ணன், தமிழ்க்கொடி, தமிழ்வாணன், தமிழ்மகன்,தமிழ்மகள்,தமிழ்ச்சுடர்,தமிழ்மணி, இன்னும் பற்பலப் பெயர்கள் உள்ளன.

இணையத்தில் தேடினால் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியும். என்னுடைய சில நண்பர்கள் தங்களது பிள்ளைகளின் பெயர்களைக் கூறும் போது புரியாமல் இரண்டு அல்லது மூன்று முறை கூட அவர்களைக் கேட்டிருக்கிறேன். கேட்டால் நட்சத்திரம், பிறந்த தேதிப் படி வைத்தார்களாம். எண் கணித முறைப்படி பெயர்களில் சில எழுத்துக்களை மாற்றிச் சொல்லி வருவாய் பார்க்கும் சில எண் கணித மேதைகள் (?!!) சில தொலைக்காட்சிகளில் நடத்தும் நிகழ்ச்சிகள் கூட இங்கு பிரபலம்.

இப்படிப் பெயர் மாற்றுவதினால் வருவதில்லை வாழ்க்கை, நல்ல எண்ணங்களிலும், நமது மொழிக்கும், இனத்திற்கும் கொடுக்கும் மரியாதையில் தான் நல்ல வாழ்க்கை உண்டு என்பதை நாம் சீக்கிரம் உணர வேண்டும்.

நாம் இனிமேல் நம்முடைய பெயர்களைத் தமிழில் மாற்ற முடியாது, நம் சந்ததிகளின் பெயர்களாவது இனி தமிழில் இருக்கட்டும்.

பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வரும், நம்மை வாழ வைக்கும் நம் தமிழ் மொழியில் இல்லாத பெயர்களும், அர்த்தங்களுமா மற்ற மொழிகளில் இருக்கப் போகின்றன்..???

சிந்தியுங்கள் தமிழரே..!!

இணையத்தில் நான் படித்த கூடுதல் தகவல்: 
தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் மட்டும் அல்ல, தலைவர்கள் / புகழ் பெற்றவர்கள், குடும்பத்தில் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அரிதாகி வருகிறது. பேரன், பேத்தி என்ற சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தான்!!

Thursday, January 19, 2012

இளையராஜாவா.?? ஏ.ஆர்.ரஹ்மானா.??





நான் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கும் நேரம் தான் தொடங்கியது என் வாழ்வில் கேசட்டில் பாடல்கள் பதிவு செய்து கேட்கும் வழக்கம். படித்தது எலெக்ட்ரிக்கல் துறை என்பதால் என் நண்பன் கார்த்திக் உதவி கொண்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி வந்து வீட்டிலேயே டேப்-ரிக்கார்டர் செய்து முடித்தேன். முக்கால்வாசி பாடல்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கவர்வதாகவே இருந்து வந்தது J எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள நான்கைந்து வீடுகளுக்கும் நான் தான் ரேடியோ ஜாக்கி J அப்போது நண்பர்கள் இளையராஜா பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வது அவ்வளவு முக்கியமாகக் கருதியதில்லை.

இளையராஜாவின் பாடல்களுக்கு என்னைப் பழக்கப்படுத்தியது என் முத்து மாமாவும், அவரது நண்பர்களும் தான். அன்றைய நாட்களில் என் மாமா ஒரு டாடா எஸ்டேட் கார் வைத்திருந்தார். அதை விற்பதற்காக அவரும், அவருடைய நண்பர்களும் செங்குன்றத்திலிருந்து சென்னைக்குப் போகும் போது சில சமயம் நானும் கூடவே செல்வதுண்டு.. அந்த வண்டியில் இளையராஜா பாடல் கேசட் தவிர வேறு பார்ப்பது அபூர்வம். அப்படியே இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.

என்ன தான் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா கேட்டாலும் கடைசியில் களைத்துப் போகும் போது காது கொடுப்பது இளையராஜாவுக்கு மட்டும் தான் J

இளையராஜாவைப் பற்றி ஏற்கனவே நிறைய பேர் நிறைய சொல்லிவிட்டார்கள். என் மனதில் பட்ட ஒரு சிலதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து சில பாடல்கள் அவரால் மட்டுமே உருவாக்க முடிந்தவை.
அப்படி நான் கேட்டு வியந்தது “சொல்லத் துடிக்குது மனசு” படத்தில் வரும் “பூவே செம்பூவே” பாடல். இதுநாள் வரை அந்த இசைக்கு மாற்று இசை கண்டு கொள்வது கடினம். இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் வயலின் இசை அவ்வளவு அருமையானது. பாடலையும் நன்றாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.





அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானது கல்லூரியில் படிக்கும் போது. ரஹ்மான் இசையமைத்தப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். அவர் இசையமைத்த பெரும்பாலான படங்களில் ஐந்து பாடல்களுமே அருமையாய் இருக்கும். சில சமயம் அவரது இசைக்கு மட்டும் தான் படமும், பாடலும். 




கல்லூரியில் ஒரு கலைநிகழ்ச்சியில் இளையராஜவுக்கும், ஏ,ஆர்,ரஹ்மானுக்கும் போட்டி போன்று பாடல்களுக்கு நடனம் ஆடிய ஒரு குழு கடைசியில் இளையராஜா இசை தான் பெரியது என்று முடிக்கும் போது கூட்டத்தில் இருந்து “உடல் மண்ணுக்கு உயிர் ரஹ்மானுக்கு” என்று வேண்டுமென்றே கத்தியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. பெரியவர் எளியவருக்கும் போய்ச் சேரும் இசையைக் கொடுப்பார். சின்னவர் இசையில் புதிய நுணுக்கங்களைச் சேர்ப்பார்.

இளையராஜாவின் இசை முதல் தடவையே கவர்ந்து விடும் மாதிரியான எளிமையான, பழக்கப்பட்ட இசை.
ரஹ்மானின் இசை புதிதாய் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தடவைக் கேட்டால் மனதிற்குப் பழக்கமாகி விடும்.

ரஹ்மானின் இசை மிக அதிகமாக சத்தம் வைத்துக் கேட்கும் மனநிலையில் இருக்கும் போது அருமை.
இளையராஜாவின் இசை அமைதியான சூழ்நிலையை அனுபவிக்க வல்ல இசை.

இளையராஜாவா, ஏ.ஆர்.ரஹ்மானா என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில்: மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்து விட்டால் கொஞ்ச காலம் பிழைக்க முடியும், வாழ முடியாது. 
வாழ்தல் பிழைத்தலை விட மேன்மையானது J

கடைசியாய் எனக்குத் தோன்றிய ஒன்று:

எனக்குத் தெரிந்து இளையராஜா சாயலில் வந்த ரஹ்மான் இசை:
“உயிரே” படத்தில் இருந்து “பூங்காற்றிலே என் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்” – இளையராஜாவின் இசை போன்ற இதமான பாடல்.

ரஹ்மான் சாயலில் வந்த இளையராஜாவின் இசை:
“ஹேராம்” படத்தில் வரும் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” – இந்தப் பாடலை இளையராஜா ஹங்கேரி இசைக்குழுவினருடன் சேர்ந்து மிக நுட்பமாய் இசையமைத்திருப்பார்.