Friday, June 8, 2012

கனவின் விலை 5000 கோடி!




இரண்டே ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் சம்பாதித்து அமெரிக்காவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள் இரண்டு இளைஞர்கள்


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சான்பிரான்ஸிஸ்கோவில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது இன்ஸ்டாக்ராம் (Instagram). தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். இவர்களது கனவுக் குழந்தையான இன்ஸ்டாக்ராமை  சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது. விலைதான் இங்கே விஷயமே. ஒரு பில்லியன் டாலர். அதாவது கிட்டத்தட்ட ஐயாயிரம் கோடி ரூபாய்.

கெவின் சிஸ்ட்ரோம், 2006ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கியவர். கூகுளில் சில காலம் பணிபுரிந்துவிட்டு, பிற்பாடு ட்விட்டர் தளம் உருவாகியபோது அதில் பணியாற்றினார். இன்னொருவர் மைக். இவரும் ஸ்டான்போர்டில் 2008ல் பட்டம் வாங்கியவர். கெவினை விட இளையவரான இவர் இன்ஸ்டாக்ராம் தொடங்குவதற்கு முன்பாக ஏதோ ஒரு சுமாரான நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றினார்.

ஸ்டான்போர்டின் முன்னாள் மாணவர்கள் என்கிற ஒற்றுமை தவிர்த்து, இருவரையும் இணைத்தது ஒரு கனவு. சொந்தமாக ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பணிகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று பல்வேறு யோசனைகளை பரிசீலித்தார்கள். கடைசியாக மொபைல் கேமராவில் எடுக்கப்படும் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எளிமையான ஒரு அப்ளிகேஷனை உருவாக்குவது என்று முடிவெடுத்தார்கள். ஏற்கெனவே யாஹூவின் ஃப்ளிக்ஆர் இணையதளம் உலகின் முதல் ஐம்பது இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கிறது. போட்டோக்களை பகிர்ந்துகொள்ள ஏராளமான தொழில்நுட்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் போட்டோக்களை வைத்து பிரத்யேகமாக, புதுமையாக என்ன செய்துவிட முடியும் என்று நண்பர்களும், இதர தொழில் முனைவோரும் இவர்களை கேலியாகப் பார்த்தார்கள். கெவினுக்கும், மைக்குக்கும் மட்டும் தங்கள் திட்டத்தில் உறுதியான நம்பிக்கை இருந்தது.


இன்ஸ்டாக்ராம் அக்டோபர் 2010ல் இயங்கத் தொடங்கியது. ஐபோன், ஐபேட், ஐபாட் டச் ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் வகையிலேயே முதலில் உருவானது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பு என்னவென்றால், மொபைலில் எடுக்கப்படும் போட்டோக்களை போனிலேயே திருத்தி, அளவு மாற்றி, அலங்கரித்து உடனடியாக உலகம் முழுக்க பகிர்ந்து கொள்ள முடியும். குறுகிய காலத்திலேயே அடுத்த இரண்டு மாதங்களில் பத்து லட்சம் பேர் இன்ஸ்டாக்ராமை பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஒரே ஆண்டில் ஒரு கோடி பேர் இன்ஸ்டாக்ராமுக்கு மாறினார்கள். 2011ம் ஆண்டின் சிறந்த ஆப்பிள் அப்ளிகேஷனாக இன்ஸ்டாக்ராமை ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

இரண்டு ஆண்டுகளாக ஆப்பிள் இயங்குதளத்திலேயே இயங்கிவந்த இன்ஸ்டாக்ராம் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி ஆண்ட்ராய்ட் தளத்துக்கான தனது அப்ளிகேஷனை வெளியிட்டது. வெளியிடப்பட்டு பன்னிரெண்டு மணி நேரத்துக்குள்ளாகவே சுமார் பத்து லட்சம் பேர் கூகுள்ப்ளே இணையதளம் மூலமாக இந்த அப்ளிகேஷனை தரவிறக்கினார்கள். அவ்வளவுதான், ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஃபேஸ்புக்கின் நிறுவனர் ஜூகர்பெர்க், இன்ஸ்டாக்ராமை கையகப்படுத்துகிறார். இப்போது இன்ஸ்டாக்ராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று கோடி. இதுவரை சுமார் பத்து கோடி படங்கள் இதன் மூலம் பகிரப்பட்டிருக்கின்றன.




Source: Puthiya Thalaimurai.

Tuesday, June 5, 2012

காமசூத்ரா, நியாயசூத்ரா மற்றும் வாத்ஸ்யாயனா




தலைப்பில் உள்ள முதல் வார்த்தை பற்றி விளக்குவதற்கான தேவை இப்போது இல்லை, அது எல்லோருக்கும் பரிச்சயமானதே.

மற்ற இரண்டு வார்த்தைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன் இந்தப் பதிவை எழுதத் தூண்டிய கே.பாலச்சந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ மௌலிக்கு என் நன்றிகள்.


’காமசூத்ரா’ என்று சொன்னவுடன் பொதுவாக அனைவருக்கும் ஒரு புன்முறுவல் வருவதுண்டு. சிலருக்கு அந்த வார்த்தையை பொதுவில் சொன்னால் சிறு சங்கடம் வருவதைக் கூடப் பார்த்திருக்கிறேன்.. வாழ்நாளில் ஒரு முறையேனும் அதை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆவல் கூட சிலருக்குத் தோன்றலாம். (அந்த ஒரு சிலரில் அடியேனும் ஒருவன்.!)


திருக்குறள் எழுதியது திருவள்ளுவர், சிலப்பதிகாரம் இயற்றியது இளங்கோவடிகள் என்று தெரிந்து வைத்திருக்கும் நாம் என்றாவது ‘காமசூத்ரா’ எழுதியது யார் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா என்பது சந்தேகமே. இதற்கு முன் ‘காமசூத்ரா’ என்பது ஒரு குழுவாக சிலர் இயற்றியது என்றே நினைத்துவந்தேன்.


ஒருநாள் அலுவலகத்தில் பொழுது போகாமல் ‘you tube'-ல் கே.பாலச்சந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ பார்க்க வேண்டிய நிர்பந்தம். ;) அந்தப் படத்தில் ‘மன்மதன் நாயுடு’ என்ற கதாபாத்திரத்தில் ‘மௌலி’நடித்திருப்பார். மௌலியின் கதாபாத்திரம் பெண்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். மௌலி அடிக்கடி ‘வாத்ஸ்யாயனா’ ‘வாத்ஸ்யாயனா’ என்று சொல்லிக் கொள்வார்.

ஒரு காட்சியில் கமல் மௌலியிடம் கேட்பார்: “அதென்ன வார்த்தைக்கு வார்த்தை வாத்ஸ்யாயனா, வாத்ஸ்யாயனா-ன்னு சொல்றீங்க.??”
மௌலி: “ஒவ்வொருத்தருக்கும் விநாயகர், வெங்கடாசலபதி, முருகன் மாதிரி எனக்கு வாத்ஸ்யாயனா Favorite God...காமசூத்ரா எழுதினவர்” என்பார்.

அப்போது தான் உரைத்தது “If there is a creation, there should be a creator" ;) :P



உடனே நண்பர் Wikipedia-வைத் தொடர்பு கொண்டு ‘வாத்ஸ்யாயனா” பற்றி ஆராய்ந்த போது தெரியவந்தது அவர் 'கௌதம ரிஷி’-யின் ‘நியாயசூத்ரா’-வை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்று.


‘நியாய சூத்ரா’-வின் தொடக்கத்திலேயே அதன் முக்கிய நோக்கம் என்பது ப்ரமண,ப்ரமேய,ப்ரயோஜன,சித்தாந்த,தர்க்க போன்ற பதினாறு பிரிவுகளில் சுதந்திர அறிவு பெறுவது தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (source: wikipedia: In the opening sūtra of the Nyāya Sūtra, it was claimed that the ultimate purpose of it is the attainment of liberation (niḥśreyasa), attained by knowledge of the sixteen categories (padārtha)[4)
மேலும் ‘நியாய சூத்ரா’ தர்க்க-வித்யா (Science of Debate) மற்றும் வாத-வித்யா (Science of Discussion) என்றும் அழைக்கப்படுகிறது.


வாத்ஸ்யாயனா கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கும் - கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறார். சில ஆய்வுகள் அவர் கி.மு.150-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகவும் தெரிவிக்கின்றன. வாத்ஸ்யாயனாவின் காலம் குறித்த சரியான தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை..



அது சரி.. ‘காமசூத்ரா’ famous ஆகி விட்டது. ஆனால் ‘வாத்ஸ்யாயனா’ மட்டும் ஏன் famous ஆகவில்லை என்று தோன்றியது.  நியாயமான கேள்வி தானே..??!!!


”வாத்ஸ்யாயனா, வாத்ஸ்யாயனா..!!!!”  :)

Monday, March 12, 2012

ஊரே ஊரே என்னப் பெத்த ஊரே..!!





சனி, ஞாயிறு என் சொந்த ஊரான விருதுநகரில் நண்பன் வீட்டுத் திருமண விழாவில் இனிதே கடந்தது. ஏழு வருடங்களுக்கு முன் நான் அந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்த போது எப்படி இருந்ததோ அதே மாதிரி இருந்தது. வழிகள் கண்டுபிடிக்க சிறிதளவும் கடினம் இல்லை. சின்ன வயதில் இருந்து நான் திரிந்த அதே தெருக்கள், சாலைகள். அதே பானு ஹோட்டல், ஆரோக்கியராஜ் மிட்டாய் கடை, பத்மா பேக்கரி, அப்சரா தியேட்டர், காளிமார்க், SNB & சன்ஸ், ஆஞ்சநேய விலாஸ், சேது’ஸ் புக் ஷாப்..

துருப்பிடித்த பெயர்ப்பலகைகள் எனது ஊரின் வயதைச் சொல்லின.. ஆங்காங்கே சாலைகள் குறுக்கே தோண்டப்பட்டு மறுபடியும் தார் பூசாமல் அவசர கதியில் மூடி இன்னும் மோசமாக இருந்தன. பல வருடங்கள் ஆகியும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது பெரிய வருத்தமாக இருந்தது. அநேகமாக கடைசியாக எங்கள் ஊரில் செய்யப்பட்ட ஒரு நல்ல விஷயம் கருமாரி மடம் பக்கத்தில் போடப்பட்ட பாலமாகத் தான் இருக்க வேண்டும்.. 

ஆங்காங்கே ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. புதிய இணைப்பு "HDFC Bank". நல்ல விஷயம்: தங்கும் விடுதிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. 
வழக்கம் போல், வாடியன் கேட்-க்கும் எம்.எஸ்.பி. பூங்காவுக்கும் இடையில் இருக்கும் பெரிய பெரிய நாடார் வீடுகள்..சில பராமரிக்கப்பட்டும், சில பராமரிக்கப்படாமலும்.. எம்.எஸ்.பி பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை பகல் 12 மணிக்கு சிலர் ஷட்டில் கார்க் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

பத்து மணி நேர மின்வெட்டு பழகிப்போயிருந்தது.. நண்பனின் அண்ணன் திருமணம் ‘பம்பாய் அரங்கில்’.. நாடார் வீட்டுத் திருமணம் என்பதால் மூன்று நாட்கள் மண்டபத்தில் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பாடு மிகவும் அருமை :)

ஞாயிற்றுக் கிழமை காலையில் கல்யாணம் முடிந்தது. நானும், நண்பனும் மதிய நேர மின்வெட்டில் இருந்து தப்பிக்க அப்சரா திரையரங்கில் ‘அரவாண்’ பார்க்கத் திட்டமிட்டோம். எங்கள் ஊர் திரையரங்கில் எங்கள் ஊர் இயக்குநர் இயக்கிய திரைப்படம் :) திரையரங்கு எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது, திரை சற்று அழுக்காக படம் கொஞ்சம் மங்கலாய்த் தான் இருந்தது. கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிடவே சிறுவயதில் அம்மாவுடன் படத்திற்கு வருவதுண்டு. இடைவேளையின் போது அப்போது பார்த்த அதே ஐஸ்கிரீம் இயந்திரம். “வாழ்வே மாயம்” படத்தின் முற்பாதியில் வரும் ”கமலும், ஸ்ரீதேவியும்,” நான் சிகப்பு மனிதன் “ரஜினி”யும் கையில் கோன் ஐஸுடன் போஸ் கொடுத்தனர். அந்தப் பக்கம் “தாவணிக் கனவுகள்” பாக்யராஜ், முந்தி காஃபி விற்கும் இடத்தில்.. பழைய படங்களின் நூறாவது நாள் ஷீல்டுகள் தரைத்தளத்தின் கதவுகளுக்கு மேல்..

படம் முடிந்து நண்பனின் வீட்டுக்குச் செல்லும் போது சிறிது சீரணியும், காராச்சேவும் ஆரோக்கியராஜ் மிட்டாய்க் கடையில் வாங்கிக் கொண்டோம். அதே விருதுநகர் பஜார், இப்போது, கடைகளுக்கு முன்னிருந்த கொட்டகைகளை நீக்கியிருந்தார்கள். தெப்பக்குளம் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது, ஆனால் தண்ணீர் கலங்கலாய்த் தெரிந்தது. 

ஊருக்குள் எங்கு போகவேண்டுமானாலும் அதிகம் பத்து நிமிடம் போதும் வண்டியில், எனது ஊரின் அத்தனைத் தெருக்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன.

இரவுச் சாப்பாடு மண்டபத்தில் முடித்து விட்டு கிளம்பிவிட்டேன். இரண்டு நாட்கள் மிக வேகமாக முடிவுற்றது.  இரண்டு நாட்களும் கல்யாண வீட்டில் வேலை இருந்ததால் கோவில்களுக்கு போகமுடியவில்லை.. புகழ்பெற்ற “விருதுநகர் புரோட்டாவும்” இந்த முறை சாப்பிடமுடியவில்லை.

எப்படியாவது பங்குனிப் பொங்கலுக்குப் போகவேண்டும். தீச்சட்டி பார்க்கவேண்டும். பொருட்காட்சிக்குப் போய் ராட்டினம் ஏற வேண்டும். ‘புரோட்டா’ சாப்பிட வேண்டும். :)

அநேகமாக அடுத்த பயணம் நண்பன் “ராஜா அண்ணாமலை” கல்யாணத்திற்குத் தான் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக ஊருக்குப் போக வேண்டும். 

சொர்க்கமாக இருந்தாலும் சொந்த ஊர் போல் வருமா??

Friday, February 17, 2012

என் தேவதைக்கு..



பெரிதாக வார்த்தைகள்
எதுவும் தேவைப்படுவதில்லை..
ஓரப் பார்வைகளும்,
ஒற்றைப் பற்றுதலும் போதுமானதாக உள்ளது,
நம் காதல் சொல்ல.. 

என் நாட்களைக் கவிதைகளாக்கும்
வித்தை தெரிந்து வைத்திருக்கிறாய் நீ..!!
ஒவ்வொரு நிமிடத்தையும் சொற்களாய்
உதிர்க்கிறேன் நான்..!!

உன் ஒற்றைச் சிரிப்பில் 
கொட்டிப் போகிறாய்
கோடிப் பூக்களை..
என் நகக் கண்களும் காதல் சாயம்
பூசிக் கொள்கின்றன, உன்
கை கோர்த்து நடக்கும் போது..

உன் உள்ளங்கைக்குள்
ஒளித்து வைத்திருக்கிறாய்
எனக்கான உலகினை..
கோர்த்திருக்கும் நம் விரல்களுக்குள் 
சுகமாய் வாழ்கிறது, நம் காதல்..

ஆயிரம் நிறமாலைகள் என்னைச் சுற்றி
உன் காதல் பார்வைகள்
தீண்டும் போது..
ஒளி மழைகள் என் உள்ளத்தில்
உன் நினைவுகள் 
தீண்டும் நேரம்..

நம் அதீத காதலை உணர்த்துவதற்குப்
பெரும்பாலும் துணைநிற்பவை
நீ எனக்கும், நான் உனக்கும்
கொடுக்கும் நெற்றி முத்தங்கள் தான்..

ஒரு நிலா
சில அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்
மற்றும் நீ..போதும்
என் இரவை நிறைவு செய்ய..

விரல் நுனியில் வைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை..
என் விரலிடையில் பூக்கின்றன
கவிதைப் பூக்கள்..

Wednesday, January 25, 2012

தமிழ்ப் பெயர்கள்


”முகநூலில் தலைப்புச் செய்தியாக இந்தத் தகவலை எழுதத் தொடங்கும் போது தான் தோன்றியது, இதை ஏன் ஒரு பதிவாக எழுதக்கூடாது என்று..?!!”

அதன் விளைவு:

இன்று (25-01-2012) காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் எழுத்தாளர் கழுகூர்.பழனியப்பன் உடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி.. அதில் தமிழ்ப் பெயர்கள் சூட்டுவதைப் பற்றிய ஒரு பேச்சு.. தமிழர்கள் நவீனமாக பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று அர்த்தம் புரியாமல் தான் பெயர் வைக்கிறார்கள்.. உதாரணத்திற்கு அவர் சொன்ன இரண்டு பெயர்கள்.

சியாமளா - என்றால் கருப்பு என்று பொருள், கருப்பாயி என்பதன் மாற்றுப் பெயர் தான் சியாமளாவாம்..!!!

ஸ்வேதா - சுவேதம் என்றால் வெள்ளையாம்.. வெள்ளையம்மா என்பதன் மாற்றுப் பெயர் தான் ஸ்வேதாவாம்.


ஏகப்பட்ட நல்ல தமிழ்ப் பெயர்கள் உண்டு. எனக்குத் தெரிந்து தமிழ் மொழியில் மட்டும் தான் அந்த மொழியின் பெயரையே மக்களுக்கு சூட்டும் வழக்கமும், வாய்ப்பும் உண்டு.

தமிழ் என்று ஆண்,பெண் இரு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டலாம்..
தமிழரசி, தமிழரசன், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழன்பன், தமிழ்க்கதிர், தமிழ்நாடன், தமிழ்நேயன்,தமிழ்வண்ணன், தமிழ்க்கொடி, தமிழ்வாணன், தமிழ்மகன்,தமிழ்மகள்,தமிழ்ச்சுடர்,தமிழ்மணி, இன்னும் பற்பலப் பெயர்கள் உள்ளன.

இணையத்தில் தேடினால் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியும். என்னுடைய சில நண்பர்கள் தங்களது பிள்ளைகளின் பெயர்களைக் கூறும் போது புரியாமல் இரண்டு அல்லது மூன்று முறை கூட அவர்களைக் கேட்டிருக்கிறேன். கேட்டால் நட்சத்திரம், பிறந்த தேதிப் படி வைத்தார்களாம். எண் கணித முறைப்படி பெயர்களில் சில எழுத்துக்களை மாற்றிச் சொல்லி வருவாய் பார்க்கும் சில எண் கணித மேதைகள் (?!!) சில தொலைக்காட்சிகளில் நடத்தும் நிகழ்ச்சிகள் கூட இங்கு பிரபலம்.

இப்படிப் பெயர் மாற்றுவதினால் வருவதில்லை வாழ்க்கை, நல்ல எண்ணங்களிலும், நமது மொழிக்கும், இனத்திற்கும் கொடுக்கும் மரியாதையில் தான் நல்ல வாழ்க்கை உண்டு என்பதை நாம் சீக்கிரம் உணர வேண்டும்.

நாம் இனிமேல் நம்முடைய பெயர்களைத் தமிழில் மாற்ற முடியாது, நம் சந்ததிகளின் பெயர்களாவது இனி தமிழில் இருக்கட்டும்.

பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வரும், நம்மை வாழ வைக்கும் நம் தமிழ் மொழியில் இல்லாத பெயர்களும், அர்த்தங்களுமா மற்ற மொழிகளில் இருக்கப் போகின்றன்..???

சிந்தியுங்கள் தமிழரே..!!

இணையத்தில் நான் படித்த கூடுதல் தகவல்: 
தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் மட்டும் அல்ல, தலைவர்கள் / புகழ் பெற்றவர்கள், குடும்பத்தில் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அரிதாகி வருகிறது. பேரன், பேத்தி என்ற சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தான்!!

Thursday, January 19, 2012

இளையராஜாவா.?? ஏ.ஆர்.ரஹ்மானா.??





நான் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கும் நேரம் தான் தொடங்கியது என் வாழ்வில் கேசட்டில் பாடல்கள் பதிவு செய்து கேட்கும் வழக்கம். படித்தது எலெக்ட்ரிக்கல் துறை என்பதால் என் நண்பன் கார்த்திக் உதவி கொண்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி வந்து வீட்டிலேயே டேப்-ரிக்கார்டர் செய்து முடித்தேன். முக்கால்வாசி பாடல்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கவர்வதாகவே இருந்து வந்தது J எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள நான்கைந்து வீடுகளுக்கும் நான் தான் ரேடியோ ஜாக்கி J அப்போது நண்பர்கள் இளையராஜா பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வது அவ்வளவு முக்கியமாகக் கருதியதில்லை.

இளையராஜாவின் பாடல்களுக்கு என்னைப் பழக்கப்படுத்தியது என் முத்து மாமாவும், அவரது நண்பர்களும் தான். அன்றைய நாட்களில் என் மாமா ஒரு டாடா எஸ்டேட் கார் வைத்திருந்தார். அதை விற்பதற்காக அவரும், அவருடைய நண்பர்களும் செங்குன்றத்திலிருந்து சென்னைக்குப் போகும் போது சில சமயம் நானும் கூடவே செல்வதுண்டு.. அந்த வண்டியில் இளையராஜா பாடல் கேசட் தவிர வேறு பார்ப்பது அபூர்வம். அப்படியே இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.

என்ன தான் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா கேட்டாலும் கடைசியில் களைத்துப் போகும் போது காது கொடுப்பது இளையராஜாவுக்கு மட்டும் தான் J

இளையராஜாவைப் பற்றி ஏற்கனவே நிறைய பேர் நிறைய சொல்லிவிட்டார்கள். என் மனதில் பட்ட ஒரு சிலதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து சில பாடல்கள் அவரால் மட்டுமே உருவாக்க முடிந்தவை.
அப்படி நான் கேட்டு வியந்தது “சொல்லத் துடிக்குது மனசு” படத்தில் வரும் “பூவே செம்பூவே” பாடல். இதுநாள் வரை அந்த இசைக்கு மாற்று இசை கண்டு கொள்வது கடினம். இந்தப் பாடலின் இரண்டாம் சரணத்திற்கு முன் வரும் வயலின் இசை அவ்வளவு அருமையானது. பாடலையும் நன்றாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.





அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானது கல்லூரியில் படிக்கும் போது. ரஹ்மான் இசையமைத்தப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். அவர் இசையமைத்த பெரும்பாலான படங்களில் ஐந்து பாடல்களுமே அருமையாய் இருக்கும். சில சமயம் அவரது இசைக்கு மட்டும் தான் படமும், பாடலும். 




கல்லூரியில் ஒரு கலைநிகழ்ச்சியில் இளையராஜவுக்கும், ஏ,ஆர்,ரஹ்மானுக்கும் போட்டி போன்று பாடல்களுக்கு நடனம் ஆடிய ஒரு குழு கடைசியில் இளையராஜா இசை தான் பெரியது என்று முடிக்கும் போது கூட்டத்தில் இருந்து “உடல் மண்ணுக்கு உயிர் ரஹ்மானுக்கு” என்று வேண்டுமென்றே கத்தியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. பெரியவர் எளியவருக்கும் போய்ச் சேரும் இசையைக் கொடுப்பார். சின்னவர் இசையில் புதிய நுணுக்கங்களைச் சேர்ப்பார்.

இளையராஜாவின் இசை முதல் தடவையே கவர்ந்து விடும் மாதிரியான எளிமையான, பழக்கப்பட்ட இசை.
ரஹ்மானின் இசை புதிதாய் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தடவைக் கேட்டால் மனதிற்குப் பழக்கமாகி விடும்.

ரஹ்மானின் இசை மிக அதிகமாக சத்தம் வைத்துக் கேட்கும் மனநிலையில் இருக்கும் போது அருமை.
இளையராஜாவின் இசை அமைதியான சூழ்நிலையை அனுபவிக்க வல்ல இசை.

இளையராஜாவா, ஏ.ஆர்.ரஹ்மானா என்று கேட்பவர்களிடம் நான் சொல்லும் ஒரே பதில்: மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்து விட்டால் கொஞ்ச காலம் பிழைக்க முடியும், வாழ முடியாது. 
வாழ்தல் பிழைத்தலை விட மேன்மையானது J

கடைசியாய் எனக்குத் தோன்றிய ஒன்று:

எனக்குத் தெரிந்து இளையராஜா சாயலில் வந்த ரஹ்மான் இசை:
“உயிரே” படத்தில் இருந்து “பூங்காற்றிலே என் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்” – இளையராஜாவின் இசை போன்ற இதமான பாடல்.

ரஹ்மான் சாயலில் வந்த இளையராஜாவின் இசை:
“ஹேராம்” படத்தில் வரும் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” – இந்தப் பாடலை இளையராஜா ஹங்கேரி இசைக்குழுவினருடன் சேர்ந்து மிக நுட்பமாய் இசையமைத்திருப்பார்.