பெரிதாக வார்த்தைகள்
எதுவும் தேவைப்படுவதில்லை..
ஓரப் பார்வைகளும்,
ஒற்றைப் பற்றுதலும் போதுமானதாக உள்ளது,
நம் காதல் சொல்ல..
என் நாட்களைக் கவிதைகளாக்கும்
வித்தை தெரிந்து வைத்திருக்கிறாய் நீ..!!
ஒவ்வொரு நிமிடத்தையும் சொற்களாய்
உதிர்க்கிறேன் நான்..!!
உன் ஒற்றைச் சிரிப்பில்
கொட்டிப் போகிறாய்
கோடிப் பூக்களை..
என் நகக் கண்களும் காதல் சாயம்
பூசிக் கொள்கின்றன, உன்
கை கோர்த்து நடக்கும் போது..
உன் உள்ளங்கைக்குள்
ஒளித்து வைத்திருக்கிறாய்
எனக்கான உலகினை..
கோர்த்திருக்கும் நம் விரல்களுக்குள்
சுகமாய் வாழ்கிறது, நம் காதல்..
ஆயிரம் நிறமாலைகள் என்னைச் சுற்றி
உன் காதல் பார்வைகள்
தீண்டும் போது..
ஒளி மழைகள் என் உள்ளத்தில்
உன் நினைவுகள்
தீண்டும் நேரம்..
நம் அதீத காதலை உணர்த்துவதற்குப்
பெரும்பாலும் துணைநிற்பவை
நீ எனக்கும், நான் உனக்கும்
கொடுக்கும் நெற்றி முத்தங்கள் தான்..
ஒரு நிலா
சில அதிர்ஷ்ட நட்சத்திரங்கள்
மற்றும் நீ..போதும்
என் இரவை நிறைவு செய்ய..
விரல் நுனியில் வைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை..
என் விரலிடையில் பூக்கின்றன
கவிதைப் பூக்கள்..

No comments:
Post a Comment