Saturday, March 13, 2010

இன்று மஹா சிவராத்ரியுடன் சனி மஹா பிரதோஷம்.!!

ஹர ஹர நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!
தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவருக்கும் இறைவ போற்றி!!
சித்சபேசா....சிவ சிதம்பரம்!!
தில்லை அம்பலம்.


பிரதோஷ காலம் சூரியாஸ்தமனத்தோடு தொடங்குகிறது. பிரதோஷ காலம் பரமேஸ்வரனைத் தியானம் செய்வதற்குத் உகந்த காலமாகும். அதாவது, ஈசுவரன் சகலத்தையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் காலம்.உலகம் ஒடுங்குகிறது; மனம் ஈசுவரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம்.வில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சாரண பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வது போல ஈசுவரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்கிறார்.


பிரதோஷ காலத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால் வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும். அத்வைதத்தின் பூர்ண நிலைன்னு சொல்லலாம்.உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. இராத்திரி ஆரம்பத்தைத் தான் பிரதோஷ காலம் என்கிறோம். அதனால் தான் இரவு நித்திய பிரளய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பறவைகள், பசுக்கள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள் கூட, தம் விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஒடுங்கிக் கொள்கின்றன.



அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்குத் தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தில், நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகின்றன.


பிரதோஷ வேளைகளில், பரமேசுவரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்யும் வேளையில், நாம் ஈச்வரனையே வழிபடவேண்டும்.



பிரதோஷ கால மகிமையை விளக்கும் புராண வரலாற்றுக் கதையைப் பார்ப்போம்.ஒரு முறை திருப்பாற்கடலில் அமரர்களும், அசுரர்களும் ஒன்று திரண்டனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம் பைக் கயிறாகவும் பூட்டி அமிர்தம் பெற பாற் கடலைக் கடைந்தனர்.ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத்தின் வாலைத் தேவர்களும் தலையை அசுரர்களும் பிடித்துக் கொண்டு அமிர்தம் எடுக்க கடைந்து கொண்டிருந்தனர்.


விஷாக்கினி ஜுவாலையுடைய வாசுகியின் பெருமூச்சுக் காற்றினால் அசுரர்கள் தேஜஸ் குறைந்து, பராக்கிரமமும் மறைந்து பலவீனர்கள் ஆயினர்.அதே சமயம், வாசுகியின் சுவாச வேகத் தினால் மேகங்கள் அங்குமிங்குமாக அடித்துத் தள்ளப்பட்டு வால் பக்கம் பெரு மழையைப் பொழிந்தன. அப்பொழுது கடல் பொங்கியது. அனைவரும் அஞ்சினர். மந்திர மலை உள்ளே அழுந்தத் தொடங்கியது.


ஸ்ரீமந் நாராயணன் கூர்மாவதாரம் எடுத்து குவலயம் காத்தார். அமரர்களுக்கு அரும்பெரும் சகாயம் செய்தார்.ஸ்ரீயப்பதியின் திருவருளால் திருப்பாற் கடலிலிருந்து சகல தேவர்களும், முனிவர்களும் பூஜித்து வரும் காமதேனு உதயம் ஆயிற்று. பின்னர் வாருணி தேவி வந்தாள். பரிமளமான பாரிஜாத வ்ருக்ஷம் தோன்றியது. ஜகன் மோகன ரூபலாவண்ய அப்சரஸ் பெண்கள் வந்தனர். குளிர்ச்சி தரும் சந்திரன் வந்தான்.கங்கையைத் திருச்சடையில் தாங்கிய சங்கரன் சந்திரனையும் சூடிக் கொண்டு சந்திரசேகரன், சந்திரமௌலிஎன்று திருப் பெயரும் ஏற்று அருளினார்.இத்தருணத்தில், கயிறாக அப்படியும், இப்படியுமாக இழுக்கப்பட்ட வாசுகி வேதனை தாளாமல் விஷத்தைக் கக்கியது.


அந்த ஆலகால விஷம் கார் காலம் போல் கருமை நிறம் சூழ்ந்து மலைபோல் ஓங்கி உயர்ந்து வடமுகாக்கினியைப் போல் சீறிப் பாய்ந்து மேலும் மேலும் எழுந்தது.அமரர்கள் அஞ்சி நடுங்கினர். அபயம் தேடி நாரணனையும், நான்முகனையும் நாடினர். அவர்களும் விஷத்தின் கொடுமையைக் கண்டு வியந்தனர். அனைவரும் ஒன்று கூடி கயிலாய மலைக்குப் புறப்பட்டனர்.

“மகா தேவா! கங்காதரா! சர்வலோக ரக்ஷகா சரணம்! சரணம்! அருள் தரும் அண்ணலே அபயம்! அபயம்!” என்று பெரு முழக்கமிட்டுக் கொண்டு, திருக்கயிலைத் திருமாமலையை வந்தடைந்தனர்.பனிமலை போல் விளங்கும் சிவன் கோவிலில் நவரத்தின மணிபீடத்தில் சிவபெருமான் அருட்பெரும் ஜோதியாக ஆதியும் அந்தமும் அற்ற பெருந்தகையாய் முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி (மஹா கௌரி) அம்மையுடன் எழுந்தருளியிருந்தார்.சிவ கோவிலின் திருவாயிலிலே நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி காவல் புரிந்து நின்றார்.கடல் போல் திரண்டு வந்த தேவர்கள் நந்திதேவரை வணங்கினர்.


“நந்தி தேவா! நமஸ்கரிக்கின்றோம். திருப்பாற்கடலில் விஷம் பொங்கி வந்துள்ளது. அதனை அணுக இயலாத நாங்கள் அச்சமுறுகிறோம். அதற்கு ஒரு மார்க்கம் காண சர்வலோக ரக்ஷகரான சர்வேஸ்வரனைக் காண வேண்டும்.”இவ்வாறு அமரர்கள் வேண்டுகோள் விடுத்ததும் நந்திதேவர் அவர்களை திருவாயிலின் முன்னே நிறுத்திவிட்டு, சிவபெருமானிடம் சென்றார்.நந்திதேவர், உள்ளே சென்று எம்பெருமானிடம் திருவாயிலில் தேவர்கள் காத்திருப்பதையும் திருப்பாற் கடலில் விஷம் பொங்கி எழுந்துள்ளதால் உடனே ஐயனைத் தரிசிக்க வேண்டும் என்று விண்ணப்பித்ததாகவும் கூறினார்.


சிவபெருமான் தேவர்களை உடனே உள்ளே அழைத்து வருமாறு ஆணையிட்டார்.நந்திதேவர் ஐயனை நமஸ்கரித்து வெளியே வந்தார். தேவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். தேவர்கள் சென்னி மீது கரம் உயர்த்தி நமஸ்கரித்து நாதனைப் போற்றித் துதித்தனர்.“லோக நாயகா! விடையேறும் பெருமானே! விஷம் பொங்கி வருகிறது திருப்பாற் கடலில். காத்தருளுவீர் கயிலை வாசா!”சிவபெருமான் அமரர்களைக் காக்கத் திருவுள்ளம் பற்றினார்.தொண்டர்களுக்காக இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கும் கருணாமூர்த்தியல்லவா சிவபெருமான்!

முன்னொரு நாள் தனது திவ்ய திருமேனியின் பிம்பத்தை திருநோக்கம் செய்து, "சுந்தரா வா" என்று திருப் பவழம் மலர்ந்தார் சிவபெருமான். அச்சமயம், அங்கு தெய்வாதீனத் திருமேனியுடன் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் (அறுபத்துமூவருள் ஒருவர்) தோன்றினார். சுந்தரமூர்த்தி அடிகள், இறையனாரின் மலரடிகளைத் தொழுது நின்றார். இறையனார்.... சுந்தர மூர்த்தி சுவாமிகளை அழைத்து, தன்னிடம் சரணம் என்று வந்த சுரர்களின் துயர் துடைக்க, ஆலகாலத்தை உருட்டி எடுத்து வருமாறு ஆக்ஞை பிறப்பித்தார்.


திருக்கயிலாய உடையாரின் ஆணையை சிரமேற்கொண்டு, திருப் பாற்கடல் விரைந்தார் சுந்தர மூர்த்தி அடிகள், சுரபதியே அச்சமுறும் வண்ணம் பொங்கி எழுந்த ஆலகாலத்தை, திருப்பாட்டுப் பாடி(தேவாரத்தில் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த பாசுரங்களுக்கு ..திருப்பாட்டு என்று பெயர்), உருட்டி கயிலை மாமலைக்கு எடுத்து வந்தார்.நொடிப் பொழுதில் அவ்விஷத்தைத் திருக்கரத்திலே வாங்கிக் கொண்ட எம்பெருமான் “தேவர்களே! இவ்விஷத்தை யாம் உண்டு விடவா? அல்லது விட்டுவிடவா?” என்று வினவினார்.விஷத்தின் உக்கிரத்தால், அஞ்சி நடுங்கியவாறு நின்று கொண்டிருந்த அமரர்கள் “தேவர் இதனை விட்டுவிட்டால் இவ்விஷம் உலகத்தையே அழித்துவிடும். அதனால் ஐயன் உகந்த வழி செய்க” என்று வேதனையுடன் விண்ணப்பித்தனர்.


அருகே எழுந்தருளியிருந்த பரமேசுவரி பக்தர்களுக்காக ஐயன் காட்டும் பரிவைக் கண்டு பெருமிதம் கொண்டார்.எம்பெருமான், பிரளயகாலத்து அக்னியைப் போல் தீக்ஷண்யமுள்ள கொடிய விஷத்தை உண்ணும் தருணத்தில் விஷம் கண்டத்தருகே வந்ததும் அனைவரும் அலறினர்.“தேவாதி தேவா! எங்களைக் காத்தருளும்.... சகலதேவ பூஜிதரான தேவரீர் இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தாங்கிக் கொள்ள வேண்டும். அகில உலகங்களும் தேவருள் அடக்கம் தானே? அதனால் இவ்விடம் ஐயனின் உடலுள் சென்றாலும் அகில லோகங்களும் அழிந்து போவதென்பது திண்ணம்” என்று பிரார்த்தித்தனர்.அது சமயம் அருகே அமர்ந்திருந்த அன்னபூரணி - அண்டமெல்லாம் காத்தருளும் கற்பகத் தருவாக விளங்கும் கற்பகவல்லி - திரிபுரசுந்தரி,உமாதேவி தம் திருக்கரத்தால் எம்பெருமானின் கண்டத்தை மெதுவாகத் தடவி சற்று அழுத்தினார்.மறுகணம் விஷம் கண்டத்திலேயே தங்கியது. அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

இதையே...அபிராமி பட்டர்...அருளிய அந்தாதியில்...வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை என்று சாதிக்கிறார்.பிரம்மாதி தேவர்கள் தேவராக்ஷஸ பைசாச கணங்கள் முதலியோர் கரங்குவித்து, “ஷட்குண ஐச்வரிய சம்பன்னரும், எங்களுக்கெல்லாம் ஆதிமூலமான பெருமானே! தேவரீருடைய வல்லமையும், வீரியமும், பராக்கிரமமும், மகிமையும் ஈடிணையற்றவை. தாங்களே சராசரங்களுக்குப் பிரபுவும், பிராண கோடி களைப் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளும் ஐந்தொழில் மூர்த்தி” என்றெல்லாம் பலவாறு தோத்திரம் செய்தனர்.

அந்த வேளையில், நந்திஎம்பெருமான், கலகல வெனச் சிரிக்க ஆரம்பித்தார். ஆலகாலமோ...தேவர்களை மட்டுமே துரத்தியது, தன்னை ஒன்றும் செய்யவில்லை, ஆகவே...தான் தேவர்களிலும் சிறந்தவர் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. தேவருக்கும், மூவருக்கும் புரியாத இந்த சிரிப்பின் காரணம், ஐயன அறிந்தார், திருநந்தி தேவரின் எண்ணத்தை(ஆணவத்தை) மாற்றத் திருவுள்ளம் கொண்ட இறையனார், நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரிந்தருளினார். எப்பொழுதும், ஐயனின் தாண்டவத்துக்கு மத்தளம் வாசிக்கும் நந்திஎம்பெருமான் மீதே இறைவன் ஆடியமையால், மஹா விஷ்ணு மத்தளம் வாசிக்கலானார். இதுவே...மஹா பிரதோஷ காலம்.

இது முதன் முதலில் நடந்தேறியது...ஒரு சனிகிழமையிலேயாம்...அதனால் தான் சனிக்கிழமை வரும் பிரதோஷகாலம்...மிக உயர்ந்ததாகக் கருதப் படுகிறது.இவ்வாறு விஷத்தால் அமரர்களுக்கும், அடியார்களுக்கும் தோஷம் எதுவும் ஏற்படாமல் காத்தருளிய ஈசனாருக்கு உகந்த காலம் தான் பிரதோஷகாலம். அக்காலத்தில் அண்ட சராசரங்களும் பகவானின் நமசிவாய மந்திரத்தைச் சிந்தையிலே கொண்டு ஏகாந்தத்தில் அடங்கி ஒடுங்கும்.பொன்னார் மேனிதனில் புலித்தோலை அணிந்த அண்ணல் மானும், மழுவும், சூலமும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன், தண்டை சிலம்பணிந்த சேவடி கிண்கிணி ஓசை எழுப்ப நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரியும் வேளை!இச் சுபயோக சுபமுகூர்த்த வேளை தான் பிரதோஷ காலம்!


நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவன் தானும் ஆடுகின்றான். அவன் ஆடுவதால் உலகமே ஆடி ஒடுங்குகிறது.இப்பிரதோஷ கால வேளையில் ஐயன் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனத்தை பிரம்மாதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் கண்டு களிக்கின்றனர்.எங்கும் தேவகானங்களும் வாத்திய கோஷங்களும், மந்திர ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மண்ணுலகத்தோரும் கண்டு களித்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மிதப்பர்.


பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.

1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

அனுதினமும் சூரியாஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நக்ஷத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள காலகட்டம் நித்திய பிரதோஷம் எனப்படும், சந்தியா காலமாகும்.


சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும்.


கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும்.


கிருஷ்ண பக்ஷ திரயோதசி-ஸ்திரவாரமாகிய சனிக்கிழமை தினம் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும்.


பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும் அதுவே பிரளய பிரதோஷமாகும்.

இந்த ஐந்து பிரதோஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்த நடனம் புரிந்து அகில லோகங்களுக்கும் அருள் பாலிக்கிறார்.பேசப் பேசப் பெருகிக்கொண்டே போகும் சிவனார் திருப்புகழ். தென்னாடுடைய சிவன். எந்நாட்டவர்க்கும் இறைவன். சிவபெருமானை சிவப்ரதோஷமான பெருநாளில் வழிபடுகின்றவர்கள் சிவனையொத்த வடிவம் பெறுவார்கள்.


சிவத்தலங்களில் பெருநாளான பிரதோஷ காலங்களில் சிவனடியார்கள் கூடி 'மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!' என்று போற்றுவார்கள். மற்றவர்களால் போற்றப்படுவார்கள்.'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான். வாயாரத்தன்னடியே பாடும் தொண்டர் எனத்தகத்தான்' என்று ஏற்றுகின்றவர்கள் மற்றவர்களால் ஏற்றப்படுவார்கள். சிவனைப் பூஜிக்கின்றவர்கள் யோகசாலிகள். அளவற்ற செல்வச் செழிப்பில் வாழ்வார்கள்.


'சிவசிவ' என்று சிவத்தையே ஜெபித்து 'சிவசிவ' என்று −இருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள். சிவனே சித்தன், சித்தனே சிவன், சிவத்துக்குள் சித்தனையும் சித்தனுக்குள் சிவத்தையும் பார்க்கத் தெரிந்தவர்கள் பூத்துப் பொலிந்தவர்கள்.சிவபெருமானை எப்பொழுதும் நினையுங்கள். அவன் திருவடியை பாடுங்கள். நீங்கள்தான் கைலாயத்தின் நிரந்தரவாசிகள்.


சிவ சிவ சங்கர
ஹர ஹர சங்கர


இத்தகைய மகிமை மிக்க பிரதோஷ விரதத்தை அனைவரும் அனுஷ்டித்து, சர்வேஸ்வரனுடைய அருளைப் பெற்று, சகல சௌபாக்கியங்களையும், ஒப்புயர்வற்ற ஐஸ்வரியமாம் மோக்ஷ பதவியும் பெறுவோம். கீழ...அதிகாரநந்தி எனப்படும், நந்தீச்வர வாகனத்தில், திருஆலவாய் உறையும் ஆதியாம் சொக்கநாதப் பெருமானும், பிரியவிடையம்மையும் எழுந்தருளி இருக்கும் அருட்காட்சி.


-- நன்றி நண்பர் அண்ணாமலை.

No comments:

Post a Comment