உங்கள் தோல்வி அறிவிக்கப்பட்ட நிமிடங்களில் உங்களில் ஏற்படும் மாற்றங்களை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா?
தோல்வியுற்ற சில கணங்களில் மனம் ஒரு மதம் பிடித்த யானையின் நடத்தைகளைக் கொண்டிருப்பதைப் பலமுறை உணந்திருக்கிறேன். அது யார் எதிரே வந்தாலும் அவர்களை கடுமையான சொற்களால் அடிக்கும். மதம் பிடித்த யானையைக் கட்டுப்படுத்த வரும் பாகனையே அந்த யானை தாக்குவதைப் போல நமக்கு ஆறுதல் சொல்லவரும் நபர்களைக் கூட சமயங்களில் அது திட்டித் தீர்க்கும்.
கட்டுப்பாடு இழந்த வாகனம் போல் மனம் அதன் போக்குக்கு நம்மைக் கொண்டு செல்லும். எல்லாம் தெரிந்தும் நாம் பலமுறை நம் மனதின் கட்டுப்பாட்டில் இருந்திருப்போம். நாம் எப்பொழுதும் வெற்றியை மட்டும் விரும்பி தோல்வியை வெறுப்பதால் தானோ என்னவோ அந்தத் தோல்வி நமக்கு வெறுப்பை மட்டுமே சேமித்தி வைத்திருக்கிறது.
தோல்விகள் எப்பொழுதும் கசப்பைத் தருவனவாகவே இருக்கின்றன. தோல்வியை எப்பொழுதும் மனம் ஏற்க மறுக்கிறது.
இந்தக் கணம் வரை தோல்வி என்பது அவமானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது. தோல்வியினால் ஏற்படும் மன உளைச்சலை விட தோல்வியுற்ற கணம் வந்து விழும் சொற்களால் ஏற்படும் வலியே அதிகமாய் இருக்கின்றது.
தோல்வியின் அரவணைப்பால் சமயங்களில் கூனிக் குறுகிப் போகிறோம். நாம் முன் நாட்களில் பெற்ற வெற்றிகள் யாவும் அர்த்தமற்றதாய் ஆகி விடுகின்றன. சில சமயம் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மனநிலையை அடைந்துவிடுகிறோம். நம் மேல் படும் அனைவரின் பார்வைகளும் ஏளனத்தைப் பிரதிபலிப்பவையாகத் தெரிகின்றன. மனம் பசியை வெளியில் சொல்ல முடியாமல் அழும் குழந்தையாய் மாறி விடுகின்றது. நம்மை அரவணைக்க வரும் கைகளில் கூட ஏதாவது உள் அர்த்தம் இருக்கக்கூடும் என்று மனம் தேடத்துவங்குகிறது.
நாம் பெரியவர்கள் ஆக ஆக தோல்வியினைத் தாங்கும் திறன் அற்றவர்களாக மாறிப்போகிறோம். சிறுவர்கள் எப்பொழுதும் தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. கிடைத்த தோல்வியை விமர்சனம் செய்து சிரித்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் பெரியவர்கள் ஆன பின் விளையாட்டில் கூட தோல்வி என்பது நம்மால் ஏற்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது.
சில வாரங்களுக்கு முன் எனது அலுவலக நண்பர்களுடன் சதுர்ப்பலகை(carrom board) ஆட்டம் ஆடும் போது இடையில் வந்த ஒருவர் சொன்ன யோசனையின் பேரில் ஆடித் தோற்ற பிறகு தோல்வியடைந்த கோபத்தில் எனக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் அவரிடம் திரும்ப சகஜமாய்ப் பேசுவதற்கு எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. தோல்வியின் ஆளுமையால் தான் இப்படி ஆனது என்று சில நிமிடங்களில் உணர்ந்து விட்டாலும் உடனே அந்த நபரைத் தேடிப் போய் பேச ஏனோ மனம் ஒத்துழைக்கவில்லை. தோல்வியின் மூர்க்க கணங்கள் உறவுகளை ஒரு நீண்ட இடைவெளியில் தொலைத்து விடுகின்றன. தொலைந்த உறவுகளை மீட்டு வருவதென்பது எப்பொழுதாவது மட்டுமே சாத்தியமாகிறது. சில சமயம் மிக அருகில் இருந்தாலும் மீட்டு வர விருப்பம் இல்லாமலேயே செய்து விடுகிறது.
கல்லூரி நாட்களில் ஒரு பாடத்தில் தோற்றுவிட்டு மீண்டும் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற ஒரு வருடம் காத்திருந்த எனக்கு இப்பொழுது சமுதாயத்தில் ஒரு அடையாளம் கிடைத்த பிறகு என் சகோதரியின் மகள் என் சொல்பேச்சைக் கேட்காமல் நான் தோற்றுப் போவது கூட சில நேரம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மிகவும் விசித்திரமானதே.
தோல்விகள் சில நேரங்களில் நம் உயிரையே விலையாகக் கொடுக்கக் கூடிய அளவுக்கு ஒரு மாயையாய் சித்தரிக்கப்படுகின்றன. தோல்வியுற்ற மனிதன் வாழத் தகுதியற்றவன் என்ற ஒரு மாயை நம்மை ஆட்கொண்டிருக்கின்றது. தோல்வி என்பது ஒரு பூதத்தைப் போல், பேயைப் போல் நம்மை எப்பொழுதும் பயம் கொள்ளச் செய்வதாகவே இருக்கிறது.
தோல்விகள் உண்மையில் அரவணைக்கப்பட வேண்டியவை.
தோல்விகள் வாழ்வின் எதார்த்ததைக் கற்றுக் கொடுப்பவை.
ஒவ்வொருவரின் வெற்றியும் ஒரு தோல்வியை அடிப்படையாய்க் கொண்டு தான் அறிவிக்கப்படுகின்றது. நம் அனுபவங்களின் ஆதாரங்கள் நம் தோல்விகள்.
சமீபகாலத்தில் தோல்வியின் அரவணைப்பில் இருந்த பொழுது நான் எழுதிய சில வரிகள்:
"எங்கிருந்தோ வந்து
சட்டென சுட்டு விடுகிறது, தோல்வி
அறிவிக்கப்படும் கணம் கோபத்தில் வந்து விழும்
ஒரு வார்த்தை...
அக்கணம் முதல் அறிந்ததில்லை
அவ்வளவு வீரியம் அந்த வார்த்தைக்கு உண்டென்று..!!
மிகக் குறைந்த நேரத்தில் சொல்லப்படும்
ஒரு சொல்லானது ஒரு மீட்க முடியாத
தொலைவில் உறவுகளைத் தொலைத்து விடுகிறது...
என் தோல்விகள் அறிவிக்கப்பட்ட
நிமிடங்களைப் பத்திரமாய் சேகரிக்க விரும்புகின்றேன்,
என்றாவது ஒரு நாள் அவற்றை என் விருப்பம் போல்
வாழ்ந்து விட..."
- நன்றி.

என் தோல்விகள் அறிவிக்கப்பட்ட
ReplyDeleteநிமிடங்களைப் பத்திரமாய் சேகரிக்க விரும்புகின்றேன்,
என்றாவது ஒரு நாள் அவற்றை என் விருப்பம் போல்
வாழ்ந்து விட..."
-> ovvoru manithanin adimanathil ulla kumuralai prathipalikindra alagaana varigal.. SABASH...
arivikappatta enbathai vida "unarappatta" yenpathu poruthamaaga irukkum... (chumma ennode bituuuu :P)
Paateluthi per vaangum pulavargal irukirargal. kuttram kandipidithey per vaangum pulavargalum irukirargal .. ithil naan evvagaiya ssarthavan enbathu umakku theriyum ... :D
ரமேஷ்: அறிவிக்கப்பட்ட என்ற வார்த்தைக்குப் பதிலாக உணரப்பட்ட என்ற சொல் கூட பொருந்தும் என்றே நினைக்கின்றேன் :-)
ReplyDeleteஎன்னுடைய கருத்து நாம் தோல்வியை உணரும் நிமிடங்கள் அர்த்தமுள்ளவை. ஆனால் நமது தோல்வி அறிவிக்கப்படும் கணங்கள் வெறுப்பும், ஏமாற்றமும், துக்கமும் நிறைந்தவை. அவற்றைத் திரும்ப அர்த்தமுள்ளவையாய் மாற்றவே விரும்புகிறேன் என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டேன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.